திங்கள், 26 செப்டம்பர், 2011

அவள்-27









செத்துப்போன கரிய நதி ஒன்று
உறைந்துகிடக்கிறது என் வீட்டிற்குள்
நதியை பின்தொடர்ந்து உட்புகுந்த
குயில்களும் புறாக்களும்
குருவிகளும் வண்ணத்து பூச்சிகளும்
எதையும் தராமல்
எதையும் பெறாமல்
பின்திரும்பி வெளியேறுகிறார்கள்
இலையோ பூவோ
செத்த நதியில் நீராடி வருகிற அது
அவளாக இருக்கலாம்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அவள்-26


 
 
 
 
 
 
 
 
 
 
 
முதன் முதலாய் 
பட்டு பாவாடை கட்டிக்கொண்ட 
வெட்கத்தில் 
பனை மரத்திற்கு பின் 
மறைந்துகொண்ட அதே அவள்தான் 
ஜீன்ஸ் போட்டுக்கொண்டதற்காக
நகர சாலை ஓரத்தில் 
நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு பின்
மறைந்துகொள்கிறாள்
பெயர்கள்தான் வேறு வேறு     

வியாழன், 15 செப்டம்பர், 2011

அவள்-25










அலைகள் சூழ்ந்து
தலை உடைத்து சிதறுகிற
பாறையின் உச்சியில்
நின்றுகொண்டிருந்தாள்

குதித்துவிடுவாளென்று
பதறிய கணத்தில்
நீந்த ஆரம்பித்தாள்
வளைந்தும் நெளிந்தும்
கடலின் இசைக்கு ஏற்ப

நடக்கவும் முடியாமல்
நீந்தவும் முடியாமல்
தத்தளிக்கிறேன் கரையில்