திங்கள், 31 ஆகஸ்ட், 2009

பிந்தி வந்த பிதா

கனவுகள் நரைத்து
இளமை இளைத்தபிறகுதான் வசப்பட்டான் அவன்

பூ சூடி புத்தாடை தரித்து
வாசனை திரவியம் பூசி
மல்லிகைகள் இறைந்த அறையில்
வெட்கம் நுரைக்க காத்திருக்கிறேன்

கதவு பிளந்து
வசீகர புன்னகையை
அறையெங்கும் சுழலவிட்டு நெருங்கியவன்
சடுதியில் விலகி பாய் சுருட்டி
யாதொன்றும் மொழியாது திகைப்பிலாழ்த்தி
விரைந்து வெளியேறினான்

நள்ளிரவில்
காமத்தின் கைகள் முலை திருக
எவரொருவரும் அறியாவண்ணம்
கொலுசொலி பதுக்கி
மறுபடி அணுகினேன் அவனிடம்

கள்ள பிதா
மொட்டை மாடியில் படுக்கை விரித்து
வானம் வெறித்த கண்கள் சொருக
விறைத்த குறியை வருடி வருடி
சுய இன்பத்தில்
திளைத்திருத்தல் கண்டதிர்ந்தேன்

ரவிக்கைக்குள் ஒளித்து வைத்திருந்த
ஆணிகளை உருவி
குருதி கொப்பளிக்க
அங்கேயே அவனை அறைந்து கொன்று
பின்திரும்பி படியிறங்குகிறேன்

நட்சத்திரங்களை புணர்கிற ஒருவனுக்கு
கண்விழித்திருக்காமல்
நித்தம் ஒரு
காமுகனுடன் களித்திருப்பேன் இனி